ஒஸ்கார் விருது வென்ற பலஸ்தீனிய இயக்குநர் - இஸ்ரேல் இராணுவத்திடமிருந்து விடுதலை
இஸ்ரேலால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ள பலஸ்தீனத்தின் மேற்கு கரையில் வைத்து நோ அதர் லேண்ட்’ என்ற பலஸ்தீன ஆவணப்படத்திற்காக ஒஸ்கார் விருது பெற்ற இணை இயக்குநர் ஹம்தான் பல்லால் இஸ்ரேல் இராணுவத்தால் கைது செய்யப்பட்டார்.
இவர் இஸ்ரேலிய குடியேறிகள் குழுவால் தாக்கப்பட்ட நிலையில், ஹம்தான் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அவர் சென்ற ஆம்புலன்ஸை இஸ்ரேலிய வீரர்கள் தாக்கி, ஹம்தானை கைது செய்து காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். இஸ்ரேல் இராணுவத்தின் இந்த நடவடிக்கைக்கு கடும் கண்டனங்கள் எழும்பின.
இந்த நிலையில் தற்போது இஸ்ரேல் இராணுவத்தினால் ஹம்தான் பல்லால் விடுதலை செய்யப்பட்டுள்ளார். மேற்கு கரையில் உள்ள கிர்யாத் அர்பா காவல் நிலையத்தில் இருந்து வெளியேறியதை பத்திரிகையாளர்கள் உறுதி செய்துள்ளனர்.
அவருடன் மேலும் இரண்டு பேரும் விடுவிக்கப்பட்டுள்ளனர். மேலும் பல்லால் முகத்தில் கடுமையான காயமும், அவர் அணிந்திருந்த ஆடையில் இரத்தக்கறை படிந்திருந்ததாகவும் பத்திரிகையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
ஹம்தான் பல்லாலின் கைது சம்பவம் தொடர்பாக இஸ்ரேல் வெளியிட்ட அறிக்கையில்,
“நாங்கள் அந்த இடத்தை அடைந்தபோது பலஸ்தீனியர்களுக்கும் இஸ்ரேலியர்களுக்கும் இடையில் வன்முறை மோதல் நடந்துகொண்டிருந்தது. அவர்கள் ஒருவருக்கொருவர் கற்களை வீசிக் தாக்கிக் கொண்டிருந்ததனர்.
பலஸ்தீனியர்கள் இஸ்ரேலிய பொதுமக்கள் மீது கற்களை எறிந்து அவர்களின் வாகனங்களை சேதப்படுத்தியதால் சண்டை தொடங்கியுள்ளது. பலர் பாதுகாப்புப்படையினர் மீது கற்களை வீசியதை அடுத்து, மூன்று பலஸ்தீனியர்களும் ஒரு இஸ்ரேலியரும் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்டனர்” எனத் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.