இலங்கைக்கான வாகன இறக்குமதியில் ஏற்பட்டுள்ள சிக்கல்!
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ள புதிய வரிக் கொள்கைகள் காரணமாக, வாகன இறக்குமதி பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாக இலங்கை வாகன இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இந்த கொள்கைகள் காரணமாக, குறிப்பாக ஜப்பானில் இருந்து இறக்குமதி செய்யப்படும் வாகனங்களின் விலை சுமார் 20 சதவீதம் உயரும் என்று சங்கத்தின் செயலாளர் அரோஷா ரோட்ரிகோ கூறினார்.
மேலும், ஜப்பானின் நாணயமான யென்னின் பெறுமதி கடந்த காலத்தில் 1.95 ஆக இருந்த நிலையில், தற்போது அது 2.15 ஆக உயர்ந்துள்ளது. இது வாகன விலைகளின் உயர்வுக்கு மேலும் வித்திடுகிறது. இந்நிலையில், இந்த வாரம் இறக்குமதி செய்யப்படும் வாகனங்களில் விலை உயர்வு தெளிவாக காணப்படும் என அவர் தெரிவித்தார்.
அதே நேரத்தில், டொலர் மற்றும் பவுண்ட் போன்ற முக்கிய வெளிநாட்டு நாணயங்களின் பெறுமதியும் உயர்வடைந்துள்ளதால், இலங்கையின் வாகன இறக்குமதி இழுபறியாகியுள்ளது. இதனுடன், தற்போது இறக்குமதி செய்யப்படும் வாகனங்களுக்கு அனுமதி பெறுவதில் தாமதங்கள் மற்றும் பல்வேறு பிழைகள் ஏற்பட்டுள்ளதாகவும், இதுவும் இறக்குமதி நடவடிக்கைகளை மேலும் சிக்கலாக்குவதாகவும் சங்கத்தின் செயலாளர் குறிப்பிட்டுள்ளார்.
Tags:
இலங்கை செய்தி