யாழில் கடவுச்சீட்டு அலுவலகத்தை நிறுவ நடவடிக்கை
யாழ்ப்பாணத்தில் குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் பிராந்திய அலுவலகம் நிறுவுவதற்கான அமைச்சரவை அனுமதி பெறப்பட்டு, அதன் பணிகள் தற்போது துரிதமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. எதிர்வரும் ஓரிரு வாரங்களில் இந்த அலுவலகம் இயக்கு நிலையை அடையக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த தை மாதம், யாழ்ப்பாணம் மாவட்டச் செயலகத்தில் நடைபெற்ற ஒருங்கிணைப்புக் கூட்டத்தில் கலந்துகொண்ட ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க, யாழ்ப்பாணத்தில் கடவுச்சீட்டு அலுவலகம் நிறுவப்படும் என அறிவித்திருந்தார். அப்போது, அலுவலகத்துக்காக மாவட்டச் செயலகத்தில் ஒதுக்கப்பட்ட இடத்தையும் அவர் நேரில் பார்வையிட்டார்.
அதன்பின்னர் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளின் அடிப்படையில், தற்போது கடவுச்சீட்டு அலுவலகத்தை ஆரம்பிப்பதற்கான நடவடிக்கைகள் வேகமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. குறிப்பாக, ‘ஒருநாள் சேவைக்கான வலைத்தள சேவைக்கு’ கோரிக்கை முன்வைக்கப்பட்ட போதிலும், யாழ்ப்பாண மாவட்டத்திலிருந்து குறைந்த எண்ணிக்கையிலான விண்ணப்பங்கள் பெறப்பட்டதாக கூறப்படுகிறது.
இதை தொடர்ந்து தென்னிலங்கையில் இருந்து குறித்த சேவை வழங்குநர்கள் விரைவில் அழைக்கப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கு இணையாக, யாழ்ப்பாணம் மாவட்ட குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தில் பணியாற்ற தமிழ் மொழி திறமைக்கொண்ட உத்தியோகத்தர்களை தெரிவு செய்வதற்காக, கொழும்பிலிருந்து வந்த விசேட குழுவின் மூலம் நேர்முகப் பரீட்சைகள் நடத்தப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.